வேதாரண்யம், மே 11: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி சீரமைப்பு நிதி மற்றும் வேதாரண்யம் நகராட்சி உள்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.33.50 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் விமலா, ஜமாத் மன்ற தலைவர் ஷாபி, இந்து இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சோம வெங்கட்ராமன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் குமரன், சுகாதார ஆய்வாளர் பிச்சையன், திமுக பொறியாளர் அணி சுதாகர், பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேலன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.