தொண்டி, ஆக.18: தொண்டியில் தினசரி மார்க்கெட் மட்டும் உள்ளது. இது அலுவலகம் செல்வோர் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு சிரமமாக உள்ளது. அதனால் தொண்டியில் வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. சுற்று வட்டார மக்கள் மற்றும் தொண்டி பகுதி மக்கள் தினமும் காய்கறி மீன் உள்ளிட்டவைகளை தினசரி மார்க்கெட்டில் வாங்குகின்றனர். இங்கு விலையும் சற்று அதிகம் உள்ளது. கிராம மக்கள் வாரச்சந்தையில் பொருள்களை வாங்க திருவாடானை செல்கின்றனர்.
இதனால் நேரம் விரையமாகிறது. அதனால் தொண்டியில் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரக்கத் அலி கூறியது, வாரச்சந்தையில் அனைத்து பொருள்களின் விலையும் மலிவாக இருக்கும். மேலும் அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்வோர் மொத்தமாக பொருள்களை வாங்க வசதியாக இருக்கும். தொண்டி பழைய போலீஸ் ஸ்டேசன் பகுதியில் சந்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.