வீரவநல்லூர், மே 31: தெற்கு கல்லிடைக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை சிறப்பு முகாம் நடந்தது. சேரன்மகாதேவி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் தெற்கு கல்லிடைகுறிச்சியில் உழவரை தேடி வேளாண்மை என்ற தலைப்பில் உழவர் நலத்துறை சிறப்பு முகாம் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மணி வரவேற்றார். யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் தலைமை வகித்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தொழில்நுட்ப துண்டு பிரசுரம் வழங்கினார்.
பொட்டல் ஊராட்சி துணைத்தலைவர் அரிராம்சேட் முன்னிலை வகித்தார். நெல்லை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி \”உழவரைத் தேடி வேளாண்மை\” எனும் உழவர் நலத்துறை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் ரஜினிமாலா நெல் பயிரை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் வேளாண்மை அலுவலர் ஆனந்த்குமார், கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் பிரேமா, தோட்டக்கலைத்துறையின் உதவி தோட்டக்கலை அலுவலர் இசக்கியம்மாள், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர் திருமால் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
முகாமில் செம்மறி, வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம், நெற்பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் கருத்துக் காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகள் பார்வையிட்டனர். துணை வேளாண்மை அலுவலர் வரதராஜன் நன்றி கூறினார்.