திருவண்ணாமலை, மே 31: சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து காரணமாக, அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. அதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு கோடை மழையால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வெகுவாக தணிந்தது. அதனால், வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் நிம்மதியடைந்தனர். மேலும், எதிர்பாராமல் தொடர்ந்து பெய்த மழையால், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு போன்ற காரணங்களால், சாத்தனூர் அணைக்கு தென்பெண்ணை வழியாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக, கடந்த வாரம் 4800 கன அடி வரை நீர்வரத்து ஏற்பட்டது. அதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த 15ம் தேதி அணையின் நீர்மட்டம் 84 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து ஏறபட்டதால், அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 104.45 அடியாக உயர்ந்திருக்கிறது. தற்போது, அணைக்கு வினாடிக்கு 580 கன அடி நீர் வரத்து உள்ளது. மேலும், அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7321 மில்லியன் கன அடியில், தற்போது 4446 மில்லியன் கன அடியாக உள்ளது. இது, அணையின் நீர் இருப்பில் 60 சதவீதமாகும்.
வழக்கமாக, கோடை காலத்தில் குடிநீர் திட்டங்களை சமாளிக்கும் அளவில்கூட அணையில் நீர்மட்டம் இருக்காது. ஆனால், இந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கோடை மழையால், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதனால், அணையின் நீர்பாசனத்தை சார்ந்துள்ள திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.