நாகர்கோவில், ஏப். 23: நாகர்கோவிலில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இலந்தையடித்தட்டில் ராகு கேது ஆளுமைக்குட்பட்ட தென்காளஹஸ்தி சிவன் கோயில் உள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 அன்று (சனிக்கிழமை) மாலை 4.20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு ராகுவும், உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் கேதுவும் பெயர்ச்சியாகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. காலை 6 மற்றும் 9 மணிக்கு ராகு கேதுவிற்கு 14 வகை அபிஷேக அலங்காரமும், மதியம் 12 மணிக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெறுகிறது. மேலும் திருகாளத்தியப்பருக்கு அபிஷேக அலங்காரம், பிற்பகல் 3 மணிக்கு ராகு கேதுவிற்கு மஹாயாகமும் தொடர்ந்து 14 வகை அபிஷேகமும் அலங்காரமும் நடக்கிறது. 4.20 மணிக்கு ராகு கேதுவிற்கு 1008 மூல மந்திரம் ஓதபட்டு தீபாராதனை நடத்தப்படுகிறது. பரிகார ராசிகளாக கடகம், சிம்மம், மகரம், விருச்சிகம், ரிஷபம், கும்பம், அர்ச்சனை ராசிகள் மீனம், மேஷம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு அர்ச்சனையும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இங்கு அரசியலில் செல்வாக்கு பெற்றவர்கள், டாக்டர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ளவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மனசோர்வு நீங்க ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ராகு கேது சந்திரன், கிரகங்களுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். சனி ஞாயிறு திங்கட்கிழமைகளில் தோஷ பரிகாரங்களும், அர்ச்சனைகளும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இங்கு மட்டுமே நவக்கிரக கொடிமரமும், மகாசிவராத்திரிக்கு நவக்கிரக வாகன ஊர்வலமும் வாகனத்தில் இருந்தபடியே காளத்தியப்பரையும் ஞானபிரசுனாம்பிகையையும் ஒரு சேர 9 முறை வலம் வந்து நவக்கிரகங்கள் வழிபடும் முறை உள்ளது. ராகு கேது பெயர்ச்சி விழா ஏற்பாட்டினை கண்ணப்பநாயனார் கர சேவகர்கள் மற்றும் தென்காளஹஸ்தி தேவஸ்தான கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.