அவிநாசி, ஏப்.26: அவிநாசி அருகே தெக்கலூரில் உயிரிழந்த முதியவரின் கண்கள் தானமாக மருத்துவமனைக்கு பெற்று கொடுத்த ரோட்டரி சங்கத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தெக்கலூர் வெள்ளாண்டிபாளையம் பூத்தோட்டத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (90). இவர், முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கருவலூர் மற்றும் தெக்கலூர் ரோட்டரி சங்கத்தினர், சென்னியப்பன் மகன் வாசுதேவன் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் கண்தானம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, குடும்பத்தாரின் சம்மதத்துடன், 3 மணி நேரத்திற்குள் கோவை சங்கரா கண் மருத்துமனை மருத்துவ குழுவினர் சென்னியப்பனின் இரு கண்களையும் தானமாக பெற்று சென்றனர். மேலும், சென்னியப்பனின் இரு கண்களும் 2 நபர்களுக்கு விரைவில் பொருத்தவுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். உயிரிழந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்க முழு முயற்சி மேற்கொண்ட கருவலூர், தெக்கலூர் ரோட்டரி சங்கத்தினருக்கு ஊர் பொதுமக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து பாராட்டினர்.