தூத்துக்குடி,நவ.19: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் 198 பயனாளிகளுக்கு ₹18.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கனிமொழி எம்.பி., தலைமை வகித்து பேசினார். மேலும், மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, நத்தம் பட்டா, பாட்டா மாறுதல் உத்தரவுகளையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் மற்றும் இலவச இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகளையும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இடுப்பொருட்களையும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மருத்துவ முகாம் வாயிலாக மருத்துவர்களால் பரிந்துரைரைக்கப்பட்ட 157 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மூன்று சக்கரவண்டி, சக்கர நாற்காலி, தள்ளுவண்டி, மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல், மூளை முடக்குவாத உபகரண பயிற்சிப்பெட்டி, பிரெய்லி உபகரணம், ஸ்மார்ட் போன் போன்ற உபகரணங்கள் என மொத்தம் 198 பயனாளிகளுக்கு ₹18.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
கூட்டத்தில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) வீரபுத்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.