தூத்துக்குடி, ஏப். 25: தூத்துக்குடியில் குற்றச்செயல்களை கண்காணிக்க 650 சிசிடிவி கேமரா அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான் உத்தரவிற்கிணங்க டவுன் ஏஎஸ்பி மதன் வழிகாட்டுதலின்படி பாளை ரோட்டில் எப்சிஐ குடோன் பகுதியில் இருந்து மாநகரின் முக்கிய பகுதிகளில் குற்றச்செயல்களை கண்காணிக்க 650 இடங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை, எப்சிஐ குடோன் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் கலந்து கொண்டு சிசிடிவி கேமரா அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
பின்னா் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகரில் முக்கியமான அனைத்து சாலை பகுதிகளிலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இது வேறு எந்த தொடர்பிலும் இல்லாமல் தனி வழித்தடம் மூலம் 4 மாத காலத்தில் முழுமையாக நிறைவு பெறும். இதற்கென்று தனி கண்ட்ேரால் ரூம் அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும். அதில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் இலகு ரக கனரக வாகனங்கள் எவ்வளவு வந்து செல்கிறது என்பதையும் கணக்கிடப்படும். அதேபோல் 3ம் மைல் தேசிய நெடுஞ்சாலை பாலம், முத்தையாபுரம் ரவுண்டானா, மாப்பிள்ளையூரணி விலக்கு, புதூர் பாண்டியாபுரம், உள்ளிட்ட 8 இடங்களில் இதன் கண்காணிப்பு இருக்கும் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு குற்றச்செயல்கள் நடக்காத வகையில் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, செயல்படுத்தப்படும். 6 மாதத்தில் நல்ல மாற்றங்கள் இதன் மூலம் தெரிய வரும், என்றார். அப்போது உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சண்முகபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.