தூத்துக்குடி, ஏப். 25: தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்குகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் சுத்தமான, சீரான குடிநீர் வழங்குவதற்காக புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கீழச் சண்முகபுரம், தாமோதர நகர், புதுகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மாநகரில் பல்வேறு இடங்களில் சீரான மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் புதிய பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் குடிநீரில் கழிவுநீர் கலப்பது போன்ற எந்த சுகாதாரமற்ற நிலையும் ஏற்படாது’ என்றார். ஆய்வின் போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, குழாய் ஆய்வாளர் சாம்ராஜ், வட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், போல்பேட்டை திமுக பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி
0