துறையூர், ஜூன் 11: துறையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 8 பவுன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெருமாள்பாளையம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நித்யாநந்தம்(70). கணவரை இழந்த இவரது பிள்ளைகள் வெளியூரில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்த இவரிடம் நேற்று மதியம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு குடிநீர் கேட்டுள்ளார். அப்போது குடிநீர் எடுக்க வீட்டுக்குள் மூதாட்டி சென்றார். அப்போது பின்னால் சென்ற அந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக மூதாட்டி துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.