ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணையில் புதிதாக ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள தும்மனட்டி பண்ணையில் கார்னேசன் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கார்னேசன் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அதனை வாங்கிச் செல்ல விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில், தோட்டக்கலைத்துறையின் இப்பண்ணையில் தற்போது ஸ்ட்ராபெரி பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணை மேலாளர் சத்தியஸ்ரீ கூறியதாவது: தும்மனட்டி பண்ணையில் தற்போது பசுமை குடியிலில் ஸ்ட்ராபெரி பழசாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நபிலா மற்றும் வின்டர்மான் என்ற இரு வகையான பழச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பசுமை குடில் முழுக்க 12 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது செடிகள் வளர்ந்த நிலையில், நாள்தோறும் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 100 கிலோ வரை பழங்கள் அறுவடை செயகிறோம். இந்த பழங்கள் கிலோ ஒன்று ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்களை பழவியல் நிலையம், டேன்ஹோடா மூலம் விற்பனை செய்கிறோம். இது தவிர பண்ணைக்கு நேரடியாக வந்து யாரேனும் பழங்களை கேட்டால், அவர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதன் முறையாக தும்மனட்டி பண்ணையில் இந்த ஸ்ட்ராபெரி பழ நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. எனினும், அதிகளவு சாகுபடி கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்….
தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணையில் புதிதாக ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி துவக்கம்
29