Sunday, June 22, 2025
Home மாவட்டம்நீலகிரி தும்மனட்டி சாலையில் சாய்ந்துள்ள சீகை மரங்களால் விபத்து அபாயம்

தும்மனட்டி சாலையில் சாய்ந்துள்ள சீகை மரங்களால் விபத்து அபாயம்

by Ranjith

 

ஊட்டி, நவ.29: தும்மனட்டி செல்லும் சாலையில் இருபுறங்களிலும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து பகுதிகளிலும் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான கற்பூரம் மரங்கள் மற்றும் சீகை மரங்கள் நடவு செய்யப்பட்டன. குறிப்பாக அனைத்து கிராமங்களுக்கு செல்லும் சாலை ஓரங்களிலும் இந்த மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டன. தற்போது, இந்த மரங்கள் நெடுநெடு என வளர்ந்து பொதுமக்களுக்கும் மற்றும் வாகன போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.

மழைக்காலங்களில் இந்த மரங்கள் சாலைகளில் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி சில சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால், சாலையோரங்களில் உள்ள ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

இதனால் மழை பெய்யும் சமயங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா வழியாக தும்மனட்டி செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளிலும் சாலை விவரங்களில் ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் வளர்ந்துள்ளன. இவைகள் சாலையின் குறுக்கே சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. காற்று அடித்தால் இந்த மரங்கள் சாலையின் குறுக்கே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.
எனவே இச்சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi