மீனம்பாக்கம், மே 6: துபாயிலிருந்து சென்னை வரும் தனியார் விமானத்தில், விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், துபாயிலிருந்து நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சுற்றுலா பயணிகளாக துபாய் சென்றுவிட்டு சென்னை வந்த 2 ஆண் பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து, இருவரையும் தனியாக அழைத்துச் சென்று அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், விலை உயர்ந்த வெளிநாட்டு கை கடிகாரங்கள், இ-சிகரெட்கள் ஆகியவை இருந்தன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், முறையான ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் மதிப்பிலான கை கடிகாரங்கள், இ-சிகரெட்கள் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திய ரூ.60 லட்சம் கைகடிகாரம் இ-சிகரெட்கள் பறிமுதல்
0