திருப்பூர், ஏப். 25: தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், அண்மையில் திருத்தப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இரு வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மற்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஆகியோர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் மாண்பை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே இருவரையும் கண்டித்து திருப்பூர் நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பதவியேற்ற துணை ஜனாதிபதி உச்சநீதிமன்ற தீர்ப்பில் தலையிடுவது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தனர். உடனடியாக இருவரும் பதவி விலகிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.