காரைக்கால், மே 6: காரைக்கால் அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்திற்குட்பட்ட தங்கமாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நவசக்தி அர்ச்சனையும் தங்கமாரியம்மனுக்கு மஞ்சள்காப்பு அலங்காரமும் நேற்று நடைபெற்றது. தங்கமாரியம்மனுக்கு 9 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நவசக்தி அர்ச்சனையும், 9 சிவாச்சாரியார்களின் பஞ்சமுக ஆரத்தியும் நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் தங்க மாரியம்மன் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான காவடிகள் மற்றும் தீமிதி திருவிழா மற்றும் விடையாற்றி மற்றும் பொன்னூஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.