Tuesday, June 24, 2025
Home மாவட்டம்திருச்சி திருவெறும்பூரில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழாவில் 2006 ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா

திருவெறும்பூரில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழாவில் 2006 ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா

by Neethimaan

திருச்சி, ஜூன் 4: இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். திருவெறும்பூர் தொகுதியில் நேற்று நடந்த, கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 6 ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் கடந்த மே 9ம் தேதி திருச்சியில் புதிய பஸ் முனையம் திறப்புவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அபபோது திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 54 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். ஏழை எளிய மக்கள், அவரவருக்கு என சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு குடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதே, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் லட்சியம்.

இதை நிறைவேற்றும் வகையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ், 2 ஆயிரத்து 6 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது, தமிழ்நாட்டு மக்களை பெரிதும் நேசிக்கும் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்குவது அவருக்கு புகழ் சேர்ப்பதாகும். கையளவு நிலம் இருந்தாலும், அது சொந்த நிலமாக இருக்க வேண்டும் என எல்லோரும் நினைப்பதுண்டு. அப்பேர்பட்டவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் தற்போது வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தரப்படும். மேலும் கோர்ட் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் வீட்டுமனை பட்டா கிடைக்காதவர்களுக்கும் வீட்டுமனை பட்டா கிடைக்க வழி செய்யப்படும். அவர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்.

என்றும் உங்களை நாங்கள் பாதுகாப்போம். உங்கள் ஆனந்தத்தோடு தற்போது நானும் ஆனந்தமடைகின்றேன் என்றார். இவ்விழாவில் 23 திருநங்கைகள் உட்பட 2006 பேருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் கோட்ட அலுவலகம், திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் மற்றும் துவாக்குடி நகராட்சி அலுவலகங்களில் நடந்த இவ்விழாவில் கலெக்டர் பிரதீப் குமார், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், துவாக்குடி நகர் மன்றத்தலைவர் காயம்பு, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன், கருணாநிதி, பேரூர் கழக செயலாளர் தங்கவேலு, பகுதி கழகச்செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி, ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் தாசில்தார் செயப்பிரகாசம், செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராமன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi