முத்துப்பேட்டை,மே 5: திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற திரௌபதை அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா கடந்த மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக அம்மன் மாலையிடுதல், அர்ஜுனர்திரௌபதை திருக்கல்யாணம், அம்மன் வீதியுலா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. ஏப்ரல் 29ஆம் தேதி நச்சுப்பொய்கை மறுநாள் இரவு அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிலையில் நேற்று காலை கூந்தல் முடிதல், காவடி, கரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 6.30 மணிக்கு கோயில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குழியில் அக்கினி வசந்தம் என்னும் தீ மிதியல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. ஏராளமானோர்தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதில் ஆயிரக்கணக்கான அம்மனின் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதி வைபவத்தை பார்வையிட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாங்குடி கிராமத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.