திருவாரூர், மார்ச் 8: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்களது விபரங்களை மென்பொருளில் பதிவு செய்துகொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் மென்பொருளில் பதிவேற்றம் செய்து ஸ்மார்ட் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தினால் வழங்கப்படும் நிவாரணம், உதவித்தொகை திட்டங்களில் பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து இதுவரை மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுள்ள உறுப்பினர்கள் தங்களது புகைப்படம், பழைய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் திருவாரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது முத்துப்பேட்டையில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வரும் வரும் 31ந் தேதி-க்குள் தங்களது விவரங்களை மென்பொருளில் பதிவேற்றம் செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04366 290420 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குள் மென்பொருளில் பதிவு மேற்கொள்ளாத உறுப்பினருக்கு வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தினால் வழங்கப்படும் நிவாரணம், உதவித்தொகை திட்டங்களில் பயனடைய இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.