திருவாரூர், மே 11: திருவாரூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக ஆவதற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகஅரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திட்டமதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கலாம்.
2025-26ம் ஆண்டிற்கு 30 நபர்களுக்கு 2.60 கோடி மானியத்தொகை ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறைதொழில் முனைவோராக இருப்பதுடன், 12ம் வகுப்பு தேர்ச்சி ஐ.டி.ஐ டிப்ளமோ படிப்பு, இளங்கலைபட்டம் அல்லது மேற்பட்ட கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.21 வயதிற்கு மேலும் 45 வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும். சிறப்புபிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 55 ஆகும்.
பயனாளி 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.பயனாளியின் குடும்பஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோரின் விண்ணப்பம் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கியால் கடன் ஒப்பளிப்பாணை பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 15 நாட்கள் இணையதளம் வழியாக தொழில் முனைவோர் பயிற்சி அளித்துதொழில் துவங்க உதவிசெய்து பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் முதல் தலைமுறைதொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியமும் வழங்கப்படும். அதனோடு 3 சதவீதம் பின்முனைவட்டி மானியமும் அளிக்கப்படும்.
எனவே, தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் பொதுமேலாளர், மாவட்டதொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர் 610004 என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் உரிய விவரங்கள் பெற்றலாம்.www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 8925534012 மற்றும் 8925534014 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.