திருவாரூர், ஜுன் 7: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின இனத்தவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களாக தனிநபர் கடன், சுய உதவிகுழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறம் மற்றும் கிராமப்புறத்தில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவிகிதம், பெண்களுக்கு 6 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சமும்- கடனாக வழங்க ப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவிகிதம், பெண்களுக்கு 4 சதவிகிதம் வட்டி விகிதத்தி லும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடனாக வழங்கப்படுகிறது.சிறுபான்மை மாணவ, மாணவிகள்அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம்- வரையில் 3 சதவிகித வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு8 சதவிகித, மாணவிகளுக்கு 5 சதவிகித வட்டிவிகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டு கொள்ள ப்படுகிறார்கள்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்தது வாகனங்கள் கடன் பெறுவதற்குமட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்படவேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விகட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் கலெக்டர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.