Sunday, July 20, 2025
Home மாவட்டம்திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள்கண்காணிப்பு: அலுவலர் நேரில் ஆய்வு; விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிக்க உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள்கண்காணிப்பு: அலுவலர் நேரில் ஆய்வு; விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிக்க உத்தரவு

by MuthuKumar

திருவாரூர், ஜுன் 23: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் மோகனசந்திரன் உடனிருந்தார். அதன்படி, திருவாரூர் ஒன்றியம் புலிவலம் ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையக் கட்டிடத்தினையும், புலிவலம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, ஆயில் போன்ற அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்தும், புலிவலம் முதல்வர் மருந்தகத்தின் மருந்து இருப்புகள் குறித்து ஊழியரிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் கேட்டறிந்தார்.

மேலும் திருக்காரவாசல் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீட்டினையும் பார்வையிட்ட நிலையில் பின்னர் திருவாரூர் வட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் திருக்காரவாசல், கோமல், மைலாப்பூர், சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளையும், திருக்காரவாசல், ஊராட்சி கோமல் பகுதியில் ரூ.ஒரு கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்தங்கூர் கிராமத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இயந்திர நடவு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் பார்வையிட்டார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்வடிவு, ஆர்.டி.ஒ சௌமியா, வேளாண்மைதுறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இளஞ்சேரன், உதவி செயற்பொறியாளர் (வெண்ணாறு) சிதம்பர நாதன், உதவி பொறியாளர் வினோத், திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலட்சுமி, வசந்தி, உதவி பொறியாளர்கள் சிதம்பரம், சூரியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi