Saturday, June 14, 2025
Home மாவட்டம்திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் 212 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் 212 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

by Neethimaan

திருவாரூர், மே 21: திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டினை விபத்தில்லா ஆண்டாக இருப்பதற்கு பள்ளி வாகன ஓட்டுனர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் செயல்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு வசதிகள் குறித்து வட்டார போக்குவரத்து துறை சார்பில் வருடந்திர ஆய்வு பணியானது நேற்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தத்உ. கலெக்டர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி கருண்கரட் முன்னிலை வகித்தனர். கலெக்டர் மோகனசந்திரன் பேசியதாவது, பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 45 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி 212 வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பள்ளி வாகனங்களில் கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா? அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளதா?, பிரதிப்பலிப்பான் வில்லை ஒட்டப்பட்டுள்ளதா? என்று அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பள்ளிவாகனங்களில் ரீவர்ஸ் கேமிரா உள்ளிட்ட ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாக கவனத்திற்கு வாகனஒட்டுனர்கள் எழுத்து பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். தொழில்நுட்பகோளாறுகளை சரிசெய்து அனுமதிப்பெற்ற பின்னே பள்ளி வாகனங்கள் இயக்க உத்தரவிடப்படும். வாகன ஓட்டுனர்கள் அவரவர் பள்ளிக்குரிய சீருடைகள் அணிவதை தடுத்து காக்கி சீருடை மட்டுமே அணிய உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான வருடாந்திர ஆய்வுதான் என்பதை கவனத்தில் கொள்ளாமல் முக்கியமான ஆய்வு என கருத வேண்டும்.

சாதரண வாகனங்கள் விபத்தை விட பள்ளி வாகனங்கள்விபத்து என்பது மிகுந்த தாக்கத்தை ஏற்ப்படுத்தும். எனவே பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் ஒட்டுனர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். எனவே அதற்கேற்ப வாகனங்களை ஓட்டுனர்கள் கவனமுடன் இயக்கிட வேண்டும் என்பதுடன் பள்ளி உரிமையாளர்கள் வாகனங்களை உரிய தகுதி சான்றுடன் இயக்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது ஆர்.டி.ஒ சௌமியா, டி.எஸ்.பி மணிகண்டன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சௌதிரராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் அசோக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பள்ளி தாளாளர் தியாகபாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

28 வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்துபள்ளி வாகனங்கள்ஆய்வு
என்பது வருடத்திற்கு ஒருமுறை நடைபெற்று வரும் நிலையில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் அனைத்து வாகனங்களையும் கலெக்டர் ஆய்வு செய்வது என்பது முடியாத காரியம் என்பதால் ஒரு சில வாகனங்கள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்படி அனைத்து பாதுகாப்பு விதிகளும் சரியாக இருக்கும் வாகனங்கள் முதல் வரிசையில் நிறுத்தப்படுவது வழக்கம் என்ற நிலையில் அந்த வாகனங்களை கலெக்டர்கள் ஆய்வு செய்வர். ஆனால் நேற்று திருவாரூரில் நடைபெற்ற ஆய்வின்போது கடைசியாக நிறுத்தி இருந்த பேரளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றின் வாகனத்தை வரவழைத்து கலெக்டர் மோகனச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட முதல் வாகனத்தில் அவசர வழி கதவு திறப்பு என்பது உடனடியாக திறக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு இடையே திறக்கப்பட்டது. இதே போல் அதே பள்ளியின் 2வது வாகனத்தையும் சோதனை செய்தபோது அந்த வாகனத்திலும் அவசர வழி என்பது செயல்படாமல் இருந்தது.

வாகனத்தின் உட்புறத்தில் இருந்து அவசர வழிக்கான கதவினை திறக்க முடியாத நிலையில் பின்பக்கம் இருந்து வரும் லாக்கினை உடைத்த பின்னரும் அந்த கதவினை திறப்பது என்பது மிகுந்த போராட்டமாக இருந்தது. இதனை கண்ட கலெக்டர் மோகனச்சந்திரன் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த அவசர வழி கதவினை திறந்து பல வருடங்கள் இருக்கும் என தெரிய வருகிறது. வாகன விபத்தின் போது அவசர வழியே பேருதவியாக இருக்கும். ஆனால் இது போன்ற பள்ளி வாகனத்தில் அவசர வழி என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவேவாகன ஆய்வினை சடங்கு போல் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் முறையாக ஆய்வு செய்யுமாறும் தகுதி இல்லாத வாகனங்களின் சான்றுகளை ரத்து செய்யுமாறும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து 212 வாகனங்களில் 28 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi