திருவாரூர், ஜுன் 30: திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் விஷ்ணுபுரம், கூந்தலூர், கூத்தனூர், திருக்கண்டீஸ்வரம், செருகுடி, சித்தமல்லி, அபிஷேககட்டளை, உதயமார்த்தாண்டபுரம் ஆகிய இடங்களில் உள்ள 8 அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. கல்வித்தகுதியாக வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும். ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும்போது ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இன்று (30ந் தேதி) மாலை 5 மணிக்குள் அளிக்கவேண்டும்.இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.