திருவாடானை, மே 10: திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே அமரன்வயல் பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கருங்கவயல் – அமரன்வயல் வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இச்சாலையில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெறாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை மிகவும் சேதமடைந்தநிலையில் உள்ளது. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலைதடுமாறி கேழே விழுந்து விபத்துகளில் சிக்கும்நிலை உள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் அவசரகால சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. ஆகையால் சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.