திருவாடானை,ஏப்.17: திருவாடானையில் குடியிருப்பு பகுதியில் மர்ம ஜீப் ஒன்று நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானையில் மேற்கு ரத வீதியில் குடியிருப்பு ஒட்டிய பகுதியில், நேற்று முன்தினம் இரவு ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது. போக்குவரத்து இல்லாத குடியிருப்பு பகுதியில் ஜீப் நின்றதால், அந்தப் பகுதியில் வசிப்போருக்கு சந்தேகம் ஏற்பட்டது. குடியிருப்புவாசிகள் சிலர் வந்து பார்த்தபோது தமிழ்நாடு அரசு என இருந்தது. ஆனால் எந்த டிபார்ட்மெண்ட் ஜீப் என போடவில்லை. பொதுவாக கடைகளுக்கு முன்னால் கார், லாரி போன்றவற்றை நிறுத்தி விட்டு பழுது பார்ப்பது போல் பார்த்து விட்டு இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி செல்வது இந்த பகுதியில் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளது. எனவே அதுபோன்று ஏதாவது திருடர்கள் ஜிப்பை நிறுத்தி விட்டு நோட்டமிடுகின்றனரோ என அச்சமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் ஜீப் நிற்கும் இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த வாகனம் என தெரியவந்தது. இரவு பத்து மணிக்கு மேல் வந்து ஜீப்பை எடுத்து சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர், நடத்துனர் செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுகின்றனரா என கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவினர் பயன்படுத்திய வாகனத்தை மறைவான இடத்தில் போட்டு விட்டு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை கண்காணித்து வருகின்றனர் என தெரியவந்தது.