திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில் சமீப காலமாக தெருநாய்களின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் நடந்து செல்பவர்களை விரட்டி செல்வதும், குரைப்பது என தொந்தரவு செய்து வருகிறது. திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் நகர மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் திருவள்ளூர் சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் உள்ள 11வது வார்டில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாய்கள் உடல்நிலை குணம் அடைந்ததும் மீண்டும் அதே இடத்தில் விடப்படும் என தெரிவித்தனர். இவ்வாறு தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி இன்னும் சில தினங்கள் நடைபெறும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்தார்.