Thursday, June 19, 2025
Home மாவட்டம்திருவள்ளூர் திருவள்ளூர் அருகே பரபரப்பு பள்ளிக்குச் சென்றபோது பிளஸ் 2 மாணவன் கடத்தலா? சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே பரபரப்பு பள்ளிக்குச் சென்றபோது பிளஸ் 2 மாணவன் கடத்தலா? சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

by Karthik Yash

திருவள்ளூர், ஜூன் 5: திருவள்ளூர் அருகே பிளஸ் 2 மாணவன் கடத்தப்பட்டாரா? என போலீசார் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே முத்தமிழ்நகர் பகுதியில் 8 வருடங்களாக வசித்து வருபவர் சரவணன், பெயின்டர். இவரது மனைவி புவனா. இந்த தம்பதிக்கு சந்தோஷ் (17) என்ற மகன் உள்ளார். இவர் கடம்பத்தூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல்நாள் பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு சந்தோஷ் சென்றுள்ளார்.

இந்நிலையில் அன்று காலை 10.40 மணியளவில் கடம்பத்தூர் அடுத்த விடையூர் பகுதியில் காலி மைதானத்தில் மயங்கிய நிலையில் இருந்த சந்தோஷை அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் பார்த்து மீட்டுள்ளனர். பின்னர், மாணவனிடம் தந்தை சரவணன் தொலைபேசி எண்ணை கேட்டு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக தந்தை சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து தன் மகனிடம் கேட்டுள்ளார். அப்போது, தன்னை யாரோ கடத்தி குடோனில் கட்டி வைத்திருந்தனர். நான் அங்கிருந்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் மாணவனை அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில், பள்ளி அருகே கடம்பத்தூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் தனது டியூசன் நண்பருடன் பேசிவிட்டு பள்ளிக்குச் சென்றபோது திடீரென காரில் வந்த முதியவர் ஒருவர் தன்னிடம் முகவரி கேட்பதுபோல் பேசிக் கொண்டிருந்தார். திடீரென முகத்தில் ஸ்பிரே அடித்து காரில் கடத்திச் சென்று குடோனில் அடைத்து வைத்தனர். இதையடுத்து தன்னை அடித்து துன்புறுத்தினர். இடது கை தோள்பட்டை அருகே கீரல்களுடன் அங்கிருந்து அரை மயக்கத்தில் தப்பித்து வந்ததாக போலீசாரிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் கடத்தல் சம்பவம் போன்று எதுவும் பதிவாகவில்லை. மேலும் விடையூர் பகுதியில் உள்ள குடோனுக்கு காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுவதிலும், குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு கார் வந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கடத்தியவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் நிலையில், சந்தோஷின் கைகளில் லேசான கீறல்கள் மட்டுமே இருந்துள்ளது. இதில், உண்மை விவரங்களை கூறுமாறு கேட்டதற்கு மாணவன் மவுனமாக இருந்துள்ளார். எனவே அவரை உண்மையாக யாரேனும் கடத்திச் சென்று துன்புறுத்தினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi