திருவள்ளூர்: திருவள்ளூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொதுமக்களிடமிருந்து 326 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வழங்க வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 99 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 32 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 39 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 94 மனுக்களும் என மொத்தம் 326 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்காக 4 பயனாளிகளுக்கு மானியத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான ஆணைக, சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு சுய தொழில் புரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ரூ. 1 லட்சம் கடன் தொகை பெறப்பட்டதை தொடர்ந்து, இதில் ரூ.25 ஆயிரம் மானியத் தொகைக்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இதில், தனித் துணை கலெக்டர் பி.ப.மதுசூதணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….