லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி(32). திருமணமாகாத இவர், ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கர்ப்பம் அடைந்து பெண் குழந்தை பெற்றார். பின்னர் இந்த குழந்தை விற்கப்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஜானகி, லால்குடி அரியூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் பிரபு(42), அவரது மனைவி சண்முகவள்ளி(38), மணக்கால் சூசையபுரம் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(35), திருச்சியை சேர்ந்த புரோக்கர் கவிதா, ஈரோடு மாவட்டம் கருத்துரை கிராமத்தை சேர்ந்த சண்முகப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜானகியின் குழந்தை விற்பனையில், டெல்லியை சேர்ந்த குழந்தை விற்பனை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து தனிப்படையை சேர்ந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், போலீசார் கடந்த 11ம் தேதி காரில் டெல்லி சென்றனர். பின்னர், அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து, டெல்லி போலீஸ் உதவியுடன் டெல்லியை சேர்ந்த குழந்தை விற்பனை கும்பல் தலைவன் கோபிகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், ‘’குழந்தையை கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டம், ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர்’ என்று தெரிய வந்தது. இதையடுத்து டெல்லியில் இருந்து கர்நாடகா வந்த தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட குழந்தையை நேற்று மாலை தனிப்படை போலீசார் திருச்சி எஸ்பி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த குழந்தையை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மூலம் காப்பகத்துக்கு எஸ்பி சுஜித்குமார் அனுப்பி வைத்தார்….