சென்னை, ஜூன் 10: கட்டிடத்திற்கு உள்ளே சென்று வெளியே வரும் வகையில் திருமங்கத்தில் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 அடுக்குமாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி அடைந்த மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 9 மாடிகளை கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறான அமைப்பு இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும், என்றனர்.