திருப்போரூர், செப்.9: திருப்போரூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில், ‘புத்தகம் படி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தனஞ்செழியன், செயலரும், நூலகருமான ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்ட இப்பேரணி கிளை நூலகத்தில் தொடங்கி நான்கு மாடவீதிகளின் வழியாக சென்று மீண்டும் நூலகத்தை அடைந்தது. இந்பேரணியில், புத்தகம் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் கோஷங்கள் எழுப்பியும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இப்பேரணியில், செங்கல்பட்டு மாவட்ட நூலக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், திருப்போரூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஸ்டெல்லா, அறுபடை வீடு மெட்ரிக்பள்ளி தாளாளர் ஜெகன்னாதன், பாரத வித்யாலயா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். முடிவில் வாசகர் வட்ட இணை செயலாளர் குமார் நன்றி கூறினார்.