கோவை, ஜூன் 25: கோவை, சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் 40 வயது பெண். மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மற்றொரு தூய்மை பணியாளர் லட்சுமி தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் துப்புரவு பெண் தொழிலாளி தனது மகனான திருநங்கை வாலிபருடன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது, லட்சுமி அவரையும் அவரது மகனையும் கேலி, கிண்டல் செய்தனர். இதுகுறித்து இருவரும் தட்டி கேட்டனர். அப்போது, லட்சுமி மற்றும் உறவினர்கள் பரிமளா, செந்தில் ஆகியோர் சேர்ந்து மாநகராட்சி தூய்மை பெண் பணியாளர் மற்றும் அவரது மகனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் லட்சுமி, பரிமளா, செந்தில் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.