திருத்துறைப்பூண்டி, ஏப்.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நுணாக்காடு ஊராட்சிக்குட்பட்ட விஸ்வகொத்தமங்கலம். மடப்புரம், தீவாம்பாள்புரம் இணைப்பு சாலை சுமார் 4.96 கிலோ மீட்டருக்கு ரூ. 312.25 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 19.9.24 மாதம் துவங்கப்பட்டது. ஆனால் பழைய சாலை தோண்டப்பட்டு பணி கிடப்பில் உள்ளது. பலமாதமாகியும் சாலைபோடப்படவில்லை. மடப்புரத்திலிருந்து இவ்வழியே நூற்றுக்கணக்கானோர் தினமும் நடந்தும் சைக்கிள் மோட்டார் பைக், கார், வேன் செல்லமுடியவில்லை. தினமும் இவ்வழியே விஸ்வகொத்தமங்கலம்.
ராமஞ்சேரி, ஆட்டூர், திருப்பாலி, நுணாக்காடு, தென்பாதி, எழிலூர், விஸ்வநாதபுரம், தென்காசி, பெரிய கொத்தமங்கலம் கிராமங்களுக்கு செல்லமுடியும். சாலை பணி முடியாததால் திருத்துறைப்பூண்டியில் வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு ஊழியர்கள் என பலர் எழிலூர் அல்லது பள்ளங்கோயில் வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது, நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து மூன்று மாதமாக மனு அளித்து பயன் இல்லை என்பதால் நேற்று மடப்புரம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நுணாக்காடு கிளை சார்பில் கட்சியின் நன் ஒன்றிய செயலாளர் ஜவகர் தலைமையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் பரமேஸ்வரி, ஒன்றிய ஆணையர் தெய்வ நாயகி, இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால் திருத்துறைப்பூண்டி – மன்னார்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.