திருப்புத்தூர், நவ.6: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகா பைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை ஏராளமான பெண்கள் யோக பைரவர் சன்னதி முன்பு வெண் பூசணி, தேங்காய், எலுமிச்சம் பழம், மண் விளக்கு உள்ளிட்டவைகளில் நெய் மற்றும் நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து மதியம் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யோக பைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு யோக பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.