திருச்செந்தூர், ஏப். 29: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே நேற்று காலை கடல் 90 அடிக்கு உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும்,அதையொட்டிய முந்தைய அல்லது பிந்தைய நாட்களிலும் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதேபோல நேற்று முன்தினம் அதிகாலை 3.40 மணி முதல் நேற்று அதிகாலை 1.31 மணி வரை அமாவாசை இருந்தது.
இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே நேற்று முன்தினம் சுமார் 60 அடி தூரமும், 2வது நாளாக நேற்று காலை சுமார் 90 அடியும் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம்போல கடலில் புனித நீராடியும், புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்தனர்.