திருச்சி, ஏப். 25: திருட்டு, கொள்ளை, வழிப்பறி கண்காணிக்க திருச்சி வயர்லஸ் சாலையில் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் 61 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 61வது வார்டில் உள்ள வயர்லஸ் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் டிஎஸ்என் அவன்யூ உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், கொள்ளை சம்பவம், வழிப்பறி, உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவதும் திருச்சி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.59 லட்சம் மதிப்பீட்டில் 61 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளது.
இந்த கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாக குடியிருப்போர் நலச்சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தனியாக கண்காணிப்பை அறை பொருத்தப்பட்டு, முழு நேரமாக கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்த கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை கண்காணிக்கும் அறைக்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கேமரா அலுவலகத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். கண்காணிப்பு கேமராவை காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் இயக்கி வைத்து பார்வையிட்டார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா துவக்க விழாவில் மண்டல தலைவர் துர்கா தேவி , உதவி ஆணையர் சண்முகம், காவல்த் துறை உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.