வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து திருச்சி அரசு ஐடிஐயில் படிக்க 7 கைதிகள் தகுதி பெற்றுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2015ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஐடிஐ தொடங்கப்பட்டது. இதற்காக நடப்பு கல்வியாண்டில் பிட்டர் 21, கணினி ஆபரேட்டர் 52, எலக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டர் 32 என மொத்தம் 168 கைதிகள் ஐடிஐயில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.
அக்டோபர் மாத இறுதிக்குள் சேர்க்கையை முடித்து, பயிற்சி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் தமிழக சிறைகளில் உள்ள தகுதியுள்ள கைதிகளை அரசு ஐடிஐக்களில் சேர்த்துக் கொள்ளலாம் என சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை செய்தது. புழல்-1, புழல்-2, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 சிறைகளில் உள்ள தகுதியுடைய மற்றும் ஐடிஐயில் சேர்ந்து பயில விருப்பமுள்ள கைதிகளின் பட்டியலை சேகரித்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் 8ம் வகுப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கைதிகளின் விவரங்கள் சேகரித்து திருச்சி அரசு ஐடிஐக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் மத்திய சிறையில் இருந்து 7 கைதிகள் அரசு ஐடிஐயில் சேர தகுதி பெற்றுள்ளனர்.