சென்னை: திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ் கொலை வழக்கில் அவரது டிரைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோதுதான் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் காரின் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது தம்பியான கவுஸ் ஆதம் பாஷாவையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கவுஸ் ஆதம் பாஷாவின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. டிரைவர் இம்ரான் பாஷா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி, டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, டிரைவர் இம்ரான்பாஷா ஜாமீன் மனுவை நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….