ஊட்டி, மார்ச் 5: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புக்களின் சார்பில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட மகளிர் அணி சமூக வளைத்தள பொறுப்பாளர் மற்றும் முன்னாள் பாலகொலா ஊராட்சி கவுன்சிலர் ராஜேஷ்வரி தலைமையில் ஊட்டியில் உள்ள ஆசியா மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் போது, குழந்தைகளுக்கு அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.