கருங்கல், நவ.1: கருங்கல் அருகே செந்தறையில் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினசரி 100க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், மாதம் சுமார் 100 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மகப்பேறு சிகிச்சை பிரிவும் இங்கு செயல்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் மின்தடை நேரங்களில் பயன்படுத்தப்படும் இன்வெர்ட்டர் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபாலிடம் மருத்துவ மனைக்கு இன்வெர்ட்டர் வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தன்னார்வலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு இன்வெர்ட்டரை வாங்கி நேரில் வழங்கினார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம்.கான், கவுன்சிலர் கிருஷ்ணன், அல்போன்சாள், மருத்துவர் ஆனி ஜனட் மேரி, சுகாதார ஆய்வாளர் ஜோஸ் செல்வராஜ், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.