திண்டுக்கல், ஏப். 24: திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி வெடி சத்தம் உணரப்படும் இடங்களில் தேசிய நில நடுக்கவியல் மையத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகப்படியான திடீர் வெடிச்சத்தம் ஏற்படுவதற்கான உரிய காரணங்களை துல்லியமாக கண்டறியும் பொருட்டும், அதற்கேற்றவாறு மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொதுமக்களை தெளிவுபடுத்திடும் பொருட்டும்,
ஆய்வு செய்ய புவியியலாளர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றினை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று தேசிய நில நடுக்கவியல் மையத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கொண்ட குழுவானது வெடி சத்தம் அடிக்கடி உணரப்படும் இடங்களான திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டத்திற்கு உட்பட்ட குளத்தூர், பாடியூர், தும்மலக்குண்டு, வடமதுரை ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்டனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.