திண்டுக்கல், ஏப். 24: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாரியப்பன், அழகர்சாமி, முருகேசன், பரமசிவம், முருகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்மேளன தலைவர் கே.ஆர்.கணேசன் சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநில குழு உறுப்பினர் மோகனா, துணை செயலாளர் தவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ.16,593 வழங்க வேண்டும். தூய்மை பணியாளர், தூய்மை காவலர்களுக்கு ரூ.12,593 வழங்க வேண்டும். பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு சம்பள நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.