Sunday, June 4, 2023
Home » திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 20 கிராம ஊராட்சிகளுக்கு ₹1.74 கோடியில் டிராக்டர்கள்

திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 20 கிராம ஊராட்சிகளுக்கு ₹1.74 கோடியில் டிராக்டர்கள்

by Neethimaan

ஒட்டன்சத்திரம். ஏப்.11: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்ட 20 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ரூ.1 கோடியே 74 இலட்சம் மதிப்பிலான டிராக்டர்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார். ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்gள்ளியில் 20 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் 15வது நிதிக்குழு மானியம் 2022-23ல் திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ள டிராக்டர்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமை வகித்தார். 20 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.8.72 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.1 கோடியே 74 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான டிராக்டர்களை வழங்கி, அமைச்சர் பேசியதாவது: ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சாலைகள் அபிவிருத்தி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் ஊராட்சிகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதிகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மக்கள் மனதில் இடம்பிடிக்கின்ற அளவிற்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகளுக்கு என்னென்ன வேலைகள் தேவை என்று சொன்னால் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், நானும் இணைந்து உடனடியாக அரசிடம் பேசி, நிதி பெற்று தர தயாராக இருக்கிறோம். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திப்பட்டி, இடையகோட்டை, லெக்கையன்கோட்டை, புலியூர்நத்தம், தங்கச்சியம்மாபட்டி, வடகாடு, விருப்பாட்சி, அத்திக்கோம்பை, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, கொத்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, தேவத்தூர், மரிச்சிலம்பு, பொருளுர், கோட்டத்துறை, மேல்கரைப்பட்டி, தொப்பம்பட்டி, மற்றும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.கூடலூர் ஆகிய 20 ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டர்கள் மூலமாக ஊராட்சிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தூய்மை காவலர்கள் மூலம் தினசரி வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க வேண்டும், பொது இடங்களில் உள்ள குப்பைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஊராட்சி தலைவர்கள் முன்மாதிரியாக இருந்து, அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி, அரசிற்கு நல்ல பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தர வேண்டும். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பொன்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் தொப்பம்பட்டி சத்தியபுவணா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் அய்யம்மாள், குஜிலியம்பாறை சீனிவாசன், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜாமணி, வட்டாட்சியர்முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன் பிரமுகர்கள் தங்கராஜ், தர்மராஜ், சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், தாஹிரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi