தா.பேட்டை, ஆக.29: தா.பேட்டை அருகே சகோதரி மாயமானதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தா.பேட்டை அடுத்த தேவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியதர்ஷினி (19), தொட்டியம் பகுதியில் தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த இவரது சகோதரி கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் மன வேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பிரியதர்ஷினியை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் காயத்திரி மற்றும் போலீசார் பிரியதர்ஷினி உடலை கைப்பற்றி வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.