திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று முன் தினம் இரவு நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, தினமும் மாலை வேளையில் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சமேத சவுந்தரராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகளுக்கு பின் கோயிலில் இருந்து புறப்பாடாகிய சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7.30 மணியளவில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அங்கு குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.