தர்மபுரி, ஜூலை 28: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, தர்மபுரி மாவட்ட வீரர், வீராங்கனைகள் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள், கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள், ஜூன் 30ம்தேதி முதல் ஜூலை 25ம்தேதி வரை நடந்த மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 564 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் தனுஷ் சிலம்பம் போட்டியில் ஒற்றை சுருள் வாள்வீச்சு பிரிவில் தங்கமும், அருண்குமார், பொதுப்பிரிவு 100 மீ., தடகள போட்டியில் வெண்கலமும், பொது பிரிவினருக்கான பெண்கள் கபடி போட்டியில், தர்மபுரி அணி வெண்கல பதக்கமும் வென்றனர்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், நேற்று கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி மற்றும் பயிற்சியாளர்கள் தினேஷ், சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.