கோவை, ஜன. 8: அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் அம்மன் குளத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டது.
இதில், இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், சேவாபாரதி போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வீடு வீடாக அட்சதையை வழங்கினர். அப்போது, காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், \\”தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளை தொடர்பு செய்து இந்த அட்சதையை வழங்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முடிவு செய்துள்ளது. கோவையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்க உள்ளோம்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளன்று ஒவ்வொரு வீடுகளிலும் கோலமிட வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீராம ஜெயத்தை பாராயணம் செய்ய வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் ராஜன், கேபிள் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.