சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன் உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கடந்த 24ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே அடுத்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட இரு நிகழ்வுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் நடந்துள்ளன. தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படையினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை ஒன்றிய அரசு நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும்….