ராமநாதபுரம், ஏப்.22: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அரசு பள்ளி தூய்மை பணியாளர்களுக்கும், பஞ்சாயத்துகளில் தற்காலிக மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு உரிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சுகாதார ஊக்குனர்களுக்கு மார்ச் 2025 வரை நிலுவையின்றி முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்கின்ற அடிப்படையில் மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட தூய்மை பணியாளர்கள் பம்ப் ஆப்ரேட்டர்கள், கணினி இயக்குனர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.