திருவண்ணாமலை, மே 31: தண்டாடம்பட்டு அருகே 9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த டி.வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார்(45). வாடகை கார் டிரைவர். இவர், கடந்த 12.5.2003 அன்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை மிரட்டி, அருகில் இருந்து புதர் நிறைந்த பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். அதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து, தண்டராம்பட்டு மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குமாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.